மசூதி மீது நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலி

489 0

லிபியாவில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 2 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 75 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

லிபியா நாட்டின் பெங்காஜி நகரில் அல்-மஜோரி பெர்கா மாவட்டத்தில் உள்ள மசூதியில் நேற்று தொழுகைக்காக பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது அந்த மசூதியில் புதைக்கப்பட்ட இரட்டை வெடிகுண்டுகள் திடீரென வெடித்து சிதறின.

இந்த தாக்குதலில் தொழுகைக்காக கூடியிருந்த அப்பாவி பொதுமக்களில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 75 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Leave a comment