அனாதையான 3 குழந்தைகள்!

261 0

காதல் திருமணம் செய்து உறவினர்கள் ஒதுக்கியதால் தனித்து வாழ்ந்து வந்த தம்பதி இறந்த சூழ்நிலையில் தற்போது அவர்களது 3 குழந்தைகளும் அனாதைகள் ஆகியுள்ளனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் விஜயா (வயது 36). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் தைல வியாபாரத்திற்காக அங்கு சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது திருமணத்திற்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறவினர்களும் சம்மதிக்கவில்லை.

இதனால் காளியப்பன் தனது காதலி விஜயாவை அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டிக்கு வந்தார். அங்கு திருமணம் செய்து கொண்டு இருவரும் வாழ்ந்து வந்தனர்.

இவர்களுக்கு மோகன்ராஜ் (15), வேல்முருகன் (14) என்ற மகன்களும் காளீஸ்வரி (9) என்ற மகளும் உள்ளனர். காதல் திருமணம் செய்ததால் இரு வீட்டினரும் அவர்களை புறக்கணித்து வந்தனர். காளியப்பன் உறவினர் மட்டும் அவ்வப்போது வந்து சென்றுள்ளனர்.

காளியப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விடவே ஒரு சில சொந்தங்களும் வருவதை நிறுத்தி விட்டனர். காதல் கணவர் இறந்து விட்டதால் வாழ்க்கையே சூனியமாகி விட்ட நிலையிலும் உறவினர்களை நம்பாமல் தனது குழந்தைகளை எப்படியாவது வளர்க்க வேண்டும் என விஜயா முடிவு செய்தார்.

இருந்தபோதும் கூலி வேலை செய்த பணம் சாப்பாட்டுக்கே சரியாக இருந்தது. இதனால் மூத்தமகன் மோகன்ராஜ் படிப்பை 8-ம் வகுப்புடன் நிறுத்தி விட்டு கடைக்கு வேலைக்கு அனுப்பினார். 2-வது மகன் வேல்முருகனையும், மகள் காளீஸ்வரியையும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து அங்குள்ள இலவச விடுதியில் தங்க வைத்திருந்தார். அங்கு வேல்முருகன் 8-ம் வகுப்பும், காளீஸ்வரி 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

தனது குழந்தைகளை படிக்க வைத்து ஆளாக்கி விட்டால் தனது கஷ்டங்கள் விலகி விடும். அதன் பிறகு அவர்களையும் நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் என விஜயா நினைத்திருந்தார். ஆனால் விஜயாவின் வாழ்க்கையில் விதி மீண்டும் விளையாடியது. கடுமையான மார்பக புற்று நோய் விஜயாவை பாதித்தது. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வந்த விஜயாவால் உரிய சிகிச்சை பெற முடியவில்லை. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்கம் பக்கம் இருந்த ஒரு சில உறவுகளையும் தங்கள் வீட்டுக்கு வந்து சென்ற ஒரு சிலரையும் உதவிக்கு அழைத்தும் யாரும் வரவில்லை. இதனால் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகளிடம் உதவி கேட்டு தங்களது தாயின் இறுதிசடங்கை மகன்கள் மோகன்ராஜ் மற்றும் வேல்முருகன் நிறைவேற்றினர்.

காதல் திருமணத்தால் உறவினர்களை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பெற்றோர்களும் இறந்து தற்போது 3 குழந்தைகளும் அனாதையாக தவிக்கின்றனர்.

Leave a comment