புதுவை முதல்வர் நாராயணசாமியின் செயல் மோசமான விமர்சனத்தின் உச்சக்கட்டம்: தமிழிசை

234 0

புதுவை முதல்வர் நாராயணசாமி பக்கோடா செய்வது, விற்பது போல நடந்த செயல் மோசமான விமர்சனத்தின் உச்சக் கட்டம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 

திருச்சியில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில அளவிலான கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

காலை 6 மணி முதல் 8 மணி வரை கோட்ட அமைப்பு தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் நரேந்திரன், கருப்பு முருகானந்தம், அரசக்குமார், ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து பா.ஜ.க.வினர் செயல்பட வேண்டிய முறைகள் குறித்து பேசினார்.

முன்னதாக திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருவது ஏற்க கூடியது அல்ல. புதுவை முதல்வர் நாராயணசாமி பக்கோடா செய்வது, விற்பது போல நடந்த செயல் மோசமான விமர்சனத்தின் உச்சக் கட்டம்.

சுய தொழில் செய்வது கேலிக்குரியது அல்ல. காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காலங்களில் வேலை வாய்ப்பை உருவாக்காமல் இருந்தது தான் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம். காங்கிரஸ் கட்சியினர் தற்போது செய்வது சுய தொழில் செய்பவர்களை கேலி செய்வது போன்றதாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment