அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தி.மு.க இன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பழமையான மொழிகளுக்கு இருக்கை உள்ளது. இதில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 42 கோடி ரூபாயில் 21 கோடி ரூபாயை பல்வேறு தமிழ் அமைப்புகள் வழங்கின. தமிழக அரசு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ் இருக்கைக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செயல் தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நிதியுதவியானது தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும், முதன்மைக்காகவும் போராடும் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வழங்கப்படும். தமிழுக்கு கிடைக்க போகும் ஹார்வர்டு இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம் ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “உயர் நீதிமன்றம், மத்திய அரசின் அலுவலகங்களில் நிச்சயம் ஒரு நாள் தமிழ் அரியணை ஏறியே தீரும். தமிழ் இருக்கை விரைவில் அமைந்து தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவ செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

