சிரியாவில் குர்து இன போராளிகளுடன் சண்டை – துருக்கி வீரர்கள் 7 பேர் பலி

236 0

சிரியாவில் குர்து இன போராளிகளுடன் நிகழ்ந்த பீரங்கி தாக்குதலில் துருக்கி படை வீரர்கள் 7 பேர் பலி ஆகினர்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக குர்து இன போராளிகள் தன்னாட்சி கேட்டு போராடி வருகிறார்கள்.இந்த போராளிகள் சிரியாவிலும் உள்ளனர். அவர்களை ஒழிப்பதற்காக அங்கு துருக்கி படைகள் அவ்வப்போது தாக்குதல்கள் தொடுத்து வருகின்றன.

குறிப்பாக அங்கு ஆப்ரின் பிராந்தியத்தில் உள்ள குர்து இன போராளிகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதற்காக ‘ஆலிவ் பிராஞ்ச்’ என்ற பெயரில் கடந்த 20-ந் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரு தரப்புக்கும் இடையே உக்கிரமான சண்டை நடந்தது. இந்த சண்டையில் குர்து இன போராளிகளின் பீரங்கி தாக்குதலில் துருக்கி படை வீரர்கள் 5 பேர் பலி ஆகினர். ஆப்ரின் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் இன்னொரு துருக்கி வீரரும், துருக்கி எல்லையில் நடந்த தாக்குதலில் மற்றொரு துருக்கி வீரரும் பலியாகினர்.

இந்த சண்டையில் ஒரே நாளில் துருக்கி படை வீரர்கள் 7 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் கருத்து தெரிவிக்கையில், “ இந்த படை வீரர்களின் உயிர்ப்பலிக்கு குர்து இன போராளிகள் இரு மடங்கு விலையைக் கொடுக்க வேண்டியது வரும்” என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து ஆப்ரின் பகுதியில் துருக்கிப் போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தின, ஆனால் அதன் சேத விவரம் தெரிய வரவில்லை.

Leave a comment