சென்னையில் இருந்து கொழும்பு சென்ற பயணியிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, 2 பயணிகள் பெல்டுகளில் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து கடத்திச் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெல்டுகளை பிரித்து பார்த்தபோது, ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றதாக இரண்டு பயணிகளையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

