றட்ணஜீவன் கூல் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களை தெரிவித்ததுடன் பொய்களையும் கூறியுள்ளார்!

306 0

காவல்துறையினரினால் ; படங்கள் ,ஆதாரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு , அவை வழக்கேட்டில் இணைக்கப்பட்டு உள்ளது. அந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் றட்ணஜீவன் கூல் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களை தெரிவித்ததுடன் பொய்களையும் கூறியுள்ளார் என யாழ்.பல்கலைகழக சட்டத்துறை தலைவரும் , சட்டத்தரணியுமான கு.குருபரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் தேசிய பேரவை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் றட்ணஜீவன் கூல் ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை கூறியுள்ளார். அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் விமர்சித்து உள்ளார்.

குறித்த வழக்கில் கடந்த 11ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றுக்கு வருமாறு மாவிட்டபுரம் ஆலய பிரதமகுருவான ஞானஸ்கந்த சர்மா குருக்களுக்கு நீதிமன்றால் அறிவித்தல்  வழங்கப்பட்டது. அது அழைப்பாணை  அல்ல.

அதன் பிரகாரம் நீதிமன்றில் முன்னிலையான குருக்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அதன் போது சம்பவ தினத்தில் ஆலயத்தில் அர்ச்சனை செய்தார்கள் எனவும் , தேர்தல் பரப்புரைகளோ அல்லது தேர்தல் தொடர்பிலான துண்டு பிரசுரங்களோ , பதாகைகளோ ஆலயத்தினுள் வைக்கபப்ட வில்லை என குருக்கள் மன்றில் தெரிவித்தார்.

அதன் பின்னர் நீதவானால் , தேர்தல் சட்டங்கள் தொடர்பில் குருக்களுக்கு தெளிவூட்டப்பட்டது. ஆலயத்தில் தேர்தல் பரப்புரைகள் நடைபெற அனுமதிக்க கூடாது என மன்று அறிவுறுத்தி இருந்து. அது எச்சரிக்கை அல்ல.

அந்நிலையில் வழக்கு இந்த மாதம் 07ஆம் திகதிக்கு ஓத்தி வைகபப்ட்டு இருந்தது. அதற்கு இடையில் முறைப்பாட்டளராக அல்லாத தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் வலிந்து காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்திருந்தார்.

அது மட்டுமன்றி அன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதி இருந்தார். வழக்கு விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என. அத்துடன் தனிப்பட்ட ஆர்வம் காட்டி வழக்கு விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என வடபிராந்திய சிரேஸ்ட காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளார். அதன் பின்னர் கபவல்துறை உயர் அதிகாரிகளில் பணிப்பின் பேரில் மீள காங்கேசன்துறை கபவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

எதிர்வரும் 07ஆம் திகதி வழக்கு விசாரணை திகதியிடப்பட்டு இருந்த நிலையில் , 29ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுத்துகொள்ளபப்ட்டது. அன்றைய தினம் முறைப்பாட்டாளரான வலி.வடக்கு பிரதேச சபை வேட்பாளர் எஸ்.சுகிர்தன் , யாழ்.மாநகர சபை மேஜர் வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் , வலி.வடக்கு பிரதேச சபை தேர்தலில் தமிழ் தேசிய பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாயுமானவர் நிகேதன் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் , மற்றும் கலாநிதி றட்ணஜீவன் கூல் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டது.

அந்த அறிவித்தல் தனக்கு கிடைக்க வில்லை என றட்ணஜீவன் கூல் ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். ஆனால் ஏனையவர்களுக்கு அந்த அறிவித்தல் கிடைக்க பெற்று அவர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். குருக்கள் அன்றைய தினம் ஆலயத்தில் இலட்சாஅர்ச்சனை இருப்பதனால் மன்றுக்கு சமுகமளிக்க முடியவில்லை என தனது சட்டத்தரணி க.சுகாஸ் ஊடாக மன்றுக்கு தெரிவித்தார்.

அதில் றட்ணஜீவன் கூலுக்கு மாத்திரம் எவ்வாறு அறிவித்தல் கிடைக்க பெறவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஊடக சந்திப்பில் ஒரு இடத்தில் கூறியுள்ளார் தேர்தல் நேரத்தில் நான் வேலை பளு மத்தியில் கொழும்பில் நிற்கும் போது நீதிமன்றம் வா என்றால் எப்படி வர முடியும் ? என பின்னர் பிறிதொரு இடத்தில் சொல்லுறார் தனக்கு அறிவித்தல் வரவில்லை என முன் பின் முரணான தகவல் தெரிவிக்கின்றார என தெரிய வில்லை.

அன்றைய தினம் (29ஆம் திகதி) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, போலீசார் தம்மிடம் இருந்த ஆதாரங்கள் படங்களை மன்றில் சமர்பித்து இருந்தனர். அவை முன்னராக நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போதும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டவை.அவை அனைத்தும் வழக்கேட்டில் இணைக்கபப்ட்டு உள்ளன.

ஆனால் றட்ணஜீவன் கூல் படங்களை போலீசார் மன்றில் சமர்ப்பிக்கவில்லை என கூறியுள்ளார். அது முற்றிலும் பொய். பொலிசாரினால் சமர்ப்பிக்கபட்ட படங்கள் வழக்கேட்டில் உள்ளன.

அத்துடன் முறைப்பாட்டலரான சுகிர்தனிடம் நீதிவான் வேறு ஆதாரங்கள் , படங்கள் உண்டா என கேட்ட போது , வேறு எவையும் இல்லை என கூறினார்.

நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் என்ன நடந்தது என தெரியாமல் நீதிமன்ற நடவடிக்கை தொடர்பிலும் , வழக்கு விசாரணை தொடர்பிலும் எதிர்மறையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியவை.

குறித்த வழக்கு தொடர்பிலான வழக்கேட்டின் பிரதியை சட்டத்தரணி ஒருவர் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் றட்ணஜீவன் கூல் குறித்த வழக்கில் சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் நிகேதன் ஆகியோரை மன்றுக்கு அழைக்க வேண்டும் என பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார் என போலீசார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

ஆகவே குறித்த வழக்கில் றட்ணஜீவன் கூல் தனிப்பட்ட ஆர்வம் காட்டி மேலதிக நேரம் செலவழிச்சு பணிபுரிந்துள்ளார். ஆனால் தான் கட்சி சார்பானவன் அல்ல என தெரிவிக்கின்றார்.

தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக இருந்து கொண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சாடி தொடர்ந்து ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வருகின்றார்.

நீதிமன்றில் விசாரணை நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கும் வழக்கு தொடர்பில் வழக்கின் போக்கை விமர்சித்து , வழக்கினை திசைமாற்றும் விதமாக கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தண்டனைக்கு உரிய குற்றங்கள் ஆகும்.

அதேவேளை றட்ணஜீவன் கூல் என்பவரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நான் நன்கறிவேன். வௌ;வேறு நிறுவனங்களில் எவ்வாறான வகிபங்குகளை கடந்த காலத்தில் வகித்தார் என்பது தொடர்பில் அறிவேன் ஆனால் அது தொடர்பில் நான் பேச விரும்பவில்லை. என மேலும் தெரிவித்தார்.

Leave a comment