பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் ; 24 நிறுவன வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான தடை நீடிப்பு

181 0

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையைக் கவனத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், மத்திய வங்கியின் நிதி விசாரணைப் பிரிவின் பணிப்பாளரினால் கடந்த வாரம் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நீடிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான தீர்மானம் 30 நாட்கள் செல்லுபடியாவதுடன், அதனை மீண்டும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் காணப்படுகின்றது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் அல்லது அதன் சார்பில் செயற்படும் வேறு தரப்பினரால் மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கலின் மூலமாக முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட நிதி வேறு தரப்பினருக்கு வழங்கப்படுவதைத் தவிர்க்கும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், குறித்த நிறுவனத்தினால் சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட நிதியை எதிர்காலத்தில் மீண்டும் அரசினால் அறவிடுவதற்கும் அரசுடைமையாக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பயனற்று செல்லாது அமையும் வகையில் அந்த நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள நிதி பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகின்றது.

பிணைமுறி கொடுக்கல் வாங்கலினால் அரசிற்கு ஏற்பட்ட இழப்பை மீண்டும் அறவிடும் செயற்பாடுகள் மற்றும் இந்த சட்டவிரோத  நடவடிக்கையுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் வெற்றி இந்த வழக்குத் தீர்ப்பின் மூலமாக மேலும் உறுதிசெய்யப்படுகிறது.

Leave a comment