இ.தொ.கா.வில் போட்டியிடும் முஸ்லிம் பிரதிநிதிகள்

318 0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மலையக பிரதேசங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருவரை இணைத்தே போட்டியிடுகின்றது. 

சேவலிலும், வெற்றிலையிலும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஒன்பது சபைகளை கைப்பற்றும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை சௌமிய மூர்த்தி தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் நேற்று (27) மாலை இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கென இ.தொ.கா அறிவித்திருந்த போதிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைவான விண்ணப்பங்களையே சமர்ப்பித்திருந்தனர். அவற்றுள் இருவர் சமர்ப்பித்த விண்ணப்ப படிவங்கள் மாத்திரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மலையக தோட்டப்பகுதிகளில் மட்டுமன்றி அனைத்து பிரதேசங்களிலும் வாழும் முஸ்லிம்களின் ஆதரவு எமக்கு பெருவாரியாக உள்ளது.

நாம் நுவரெலியா மாவட்டத்தில் கைப்பற்றும் சபைகளில் ஆலோசகர்கள் பதவியும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கமைவாக குறிப்பிட்ட பிரதேசங்களில் அனைத்து இன மக்களை சார்ந்தவர்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆலோசகர்கள் குழுவாக இயங்குவார்கள்.

அனைத்து பகுதிகளிலும் எம்மோடு சமாதானத்துடன் வாழும் மக்கள் அனைவருக்கும் வேறுபாடு இன்றி சேவைகளை முன்னெடுக்கவும் அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ள நிலையில் இ.தொ.கா சேவல் சின்னத்தில் மட்டுமின்றி ஜனாதிபதியின் ஆதரவுடன் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிடுகின்றது.

எனவே எமது இலக்கான 9 சபைகளை கைப்பற்றுவதற்கு மக்கள் உணர்வுபூர்வமாக இ.தொ.காவின் சேவல் சின்னத்திற்கு வெற்றிலை சின்னதிற்கும் வாக்களிக்க வேண்டும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave a comment