யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறச் செல்லும் மதகுருக்கள், துறவிகளுக்கென சிறப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி விரைந்து சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மறை மாவட்ட பொது நிலையினர் கழகம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கடித மூலம் இவ்வாறு கோரியுள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு தற்போது சிறப்பாக இயங்கி வருவதையிட்டு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எனினும், குறித்த பிரிவுக்கு சிகிச்சை பெறவரும் மதகுருக்கள்இ துறவிகள் பெருமளவு நோயாளிகளுடன் இணைந்து காத்திருந்து வரிசையாக வந்து சிகிச்சை பெறுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஆன்மீகப் பணியுடன் மக்கள் பணிகளையும் முன்னெடுத்துவரும் மதத்தலைவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. எனவே, எதிர்காலத்தில் அவர்களுக்கென்று தனியான பகுதியையோ, அன்றி முன்னுரிமை அடிப்படையிலோ சிகிச்சைகளை வழங்க ஏற்பாடு செய்து மதகுருக்களின் நலன்களைப் பேணுவதோடு அவர்களுக்குரிய மரியாதையை வழங்கும் மனிதப் பண்பையும் மேற்கொள்ள வேண்டுமென யாழ்ப்பாண மறை மாவட்ட பொது நிலையினர் கழகத்தினராகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம் என குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரின் பிரதிகள் யாழ் மாவட்ட செயலர் வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் யாழ் ஆயர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.