விவசாயத்துறை அபிவிருத்திக்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்குவோம்

228 0

இலங்கை விவசாயத்துறையின் அபிவிருத்திக்கு பல்வேறு புதிய நிகழ்ச்சித் திட்டங்களின்  ஊடாக உதவி வழங்க எதிர்பார்த்துள்ளதாக, தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவர் சூலமனி சட்சுவான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம் உள்ளிட்ட விவசாயத்துறைக்கான நவீன தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்த ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்து அரசாங்கத்துடன் கட்டியெழுப்பியுள்ள நட்புறவை அடிப்படையாகக்கொண்டு தாய்லாந்து மன்னரின் பணிப்புரைக்கமைய இந்த உதவியை இலங்கைக்கு வழங்குவதாக தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு, 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, தாய்லாந்து அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2015 நவம்பர் மாதம் தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் 2016 ஒக்டோபர் மாதம் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி , தாய்லாந்துக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், அதற்கு ஒரு மாதத்தின் பின்னர் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாத் மறைவை தொடர்ந்து மன்னரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதைச் செலுத்த ஜனாதிபதி மீண்டும் தாய்லாந்துக்குச் சென்றிருந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற மன்னரின் இறுதி கிரியைகளில் இலங்கை நாட்டின் விசேட பிரதிநிதி ஒருவரை பங்குபற்றச் செய்யவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

Leave a comment