இலங்கையில் கொள்ளையிட்ட வௌிநாட்டவர்கள் பற்றிய தகவல் வௌியானது!

227 0

மாரவில – கடுனேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 28,000 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக் கொண்ட இரு வௌிநாட்டவர்கள் குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

கடந்த 14ம் திகதி மாலை கால்நடையாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் ஐந்து கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை பற்றி அங்கிருந்த ஊழியரிடம் வினவியுள்ளார்.

இதனையடுத்து, மற்றைய சந்தேகநபரும் பல்வேறு கேள்விகளை சம்பந்தப்பட்ட ஊழியரிடம் கேட்டுள்ளார்.

பின்னர், இலங்கையிலுள்ள அதிக பெறுமதியுடைய பணம் பற்றி விசாரித்த அவர்கள், அவற்றைப் பார்க்க வேண்டும் எனவும் குறித்த ஊழியரிடம் கூறியுள்ளனர்.

இதற்கமைய, அந்த ஊழியரிடம் இருந்த 28,000 ரூபா பணத்தை மிக நூதனமாக முறையில் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதுஇவ்வாறு இருக்க, சந்தேகநபர்கள் இருவரும் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்ததோடு, நிதி மோசடியில் ஈடுபட்ட இருவரும் தப்பிக்க மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பந்தப்பட்ட இரு வௌிநாட்டவர்களும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சிலாபம் பகுதியிலுள்ள துணிக் கடை ஒன்றிலும் இதேபோன்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வௌியாகியுள்ளது.

Leave a comment