உணவு தன்னிறைவுக்கு தைப்பொங்கள் வலுச் சேர்க்க பிரார்த்திப்போம்- மைத்திரிபால

228 0

உழவுக்குப் பெருமை சேர்க்கும் தைத்திருநாளானது, உணவு உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவைப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கும் வலு சேர்ப்பதாகவே அமைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மானிட சமூகத்தினை நாகரிகத்தை நோக்கிப் பயணிக்க வைப்பதில் உழவுத் தொழிலே முக்கிய காரணியாக அமைந்தது.

நவீன கைத்தொழில் மயமாக்கத்தினதும் தொழில்நுட்ப வளர்ச்சியினதும் ஈர்ப்பினால் கிராமவாசிகள் விவசாயத்தைக் கைவிட்டு, நகரங்களை நோக்கி படையெடுக்கும் நிலையிலும் பண்டைய பாரம்பரியங்களுடன் கொண்டாடப்படும் இத்தகைய பண்டிகைகள் மனிதனின் கலாசாரம், பண்பாடு, மனிதநேயம், ஒற்றுமை, பகிர்ந்துண்ணல் மற்றும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் போன்ற விழுமியப்பண்புகளை சமூகத்தில் பேண உதவுவதுடன் அவற்றை எதிர்கால தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் வகையில் பாதுகாப்பதற்கும் வாய்ப்பாக அமைகின்றன.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா நலன்களும் பொங்கச்செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் எனவும் ஜனாதிபதி மேலும் அச்செய்தியில் கூறியுள்ளார்.

Leave a comment