கைதி தூக்கிட்டு தற்கொலை : பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

229 0

புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தற்கொலைசெய்து கொண்டார்.

சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை வேளையில் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த அனைத்து உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணித்துள்ளார்.

கஞ்சாவை உடன் வைத்திருந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்காக குறித்த 17 வயது இளைஞன் நேற்று இரவு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரை பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றுள்ள அதிகாரிகள் அங்கு அவரை தடுத்து வைத்து விசாரித்த பின்னர் பொலிஸ் கூண்டில் தடுத்து வைத்துள்ளனர்.

ஹப்புத்தளை – கிரிமானகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு பொலிஸ் சிறைக் கூண்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் அணிந்திருந்த ஆடையினைப் பயன்படுத்தியே அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  இந் நிலையில் குறித்த இளைஞனுக்கு பொலிஸாரால் தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டதா, என்பது தொடர்பிலும் இதன்போது தீவிர விசாரணை நடாத்தப்படவுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மீது இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

Leave a comment