உயிரிழந்து பல நாட்களான மூதாட்டியின் சடலத்தை பாதுகாத்த நாய் – பதுளையில் சம்பவம்

202 0

70 வயதான மூதாட்டியின் சடலத்தை, அவ்வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், சில நாட்களாகப் பாதுகாத்து வந்த சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை – நெலும்கம வித்தியாலத்துக்கு முன்பாக அமைந்துள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட நாயே, இவ்வாறு நடந்துகொண்டுள்ளது.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அயலவர்கள் கடந்த 6ஆம் திகதி மாலை 6 பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார், வீட்டின் கூரையை உடைத்து உள்ளே சென்றபோது, அவ்வீட்டில் வசித்த மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். அந்த மூதாட்டியின் சடலத்துக்கு அருகில், நாயொன்று காவல் காத்துக்கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில், பதுளை நீதவான் ஆனந்த மொரகொடவின் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றது.

நித்திரையில் இருந்தவாறே இவர் மரணித்திருக்கலாம் என்றும், இவர் உயிரிழந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம், பதுளை தேசிய வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற விசேட வைத்தியரால் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்து, அதன் அறிக்கையை நீதிமன்றிடம் கையளிக்குமாறு பதில் நீதவான் ஆனந்த மொரகொட, பதுளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை தான் கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உள்ள வீட்டில் பணிபுரிவதாகவும், தனது மனைவிக்கு துணையாக நாய் மட்டுமே இருந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின், 71 வயதான கணவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment