அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு

13151 0

அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்கெட்டு கிடப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை, சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனால் அரசியலுக்கு வரப்போவதை சூசகமாக தெரிவித்திருந்தார்.
அவர் அரசியல் பணம் உறுதி ஆகிவிட்டதாகவே பெரும்பாலான ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார் ரஜினி. இதன்மூலம் தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.
இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். 6-வது நாளான இன்று தென்சென்னை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இந்த சந்திப்புக்காக ஏராளமான ரசிகர்கள் காலையிலேயே மண்டபத்திற்கு வந்து குவிந்துள்ளனர்.
ரசிகர்களுடனான சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம்  குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். எனவே, தென்சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்துள்ளனர். மண்டபம் முழுவதும் நிரம்பி, மண்டபத்திற்கு வெளியிலும் ரசிகர்கள் திரண்டுள்ளனர். இதனால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் இன்று காலை ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மண்டபத்திற்குள் சென்ற அவர் ரசிகர்களிடையே பேசியதாவது:-
ரசிகர்கள் இந்த அளவுக்கு கட்டுப்பாட்டோடு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். நான் அரசியலுக்கு வருவதைப் பார்த்து பயம் இல்லை. மீடியாவைப் பார்த்து தான் பயம். நான் எதையாவது சொல்ல அது விவாதமாகிவிடுகிறது.
நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லை.  நான் பணம், பெயர் மற்றும் புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆயிரம் மடங்கு அதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இப்போது அரசியல் கெட்டுப்போய்விட்டது, ஜனநாயகம் சீட்கெட்டுப் போய்விட்டது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment