தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுத்தளத்தை நிலைப்படுத்தக் கூடாது என்பதில் தமிழரசுக்கட்சி திட்டமிட்டு சதி!

591 0

சில சம்பவங்கள் நடைபெறும்போது அதன் எதிர்வினைக்கு செயலாற்றும்போது அதன் ஊடாக பல உண்மைகள் வெளிவருவதுண்டு. அப்படித்தான் சுமந்திரன் தனது அண்மைய விவாதம் ஒன்றின்போது “ஏக்கிய ராச்சிய” என்றால் தமிழர்கள் பயப்படுகின்றார்கள் என மைத்திரியே சிங்களத்தில் சொன்னதை சொல்லி அப்படியிருந்தும் இன்னமும் அது மாற்றப்படப்போவதில்லை என்பதை ஏற்கவேண்டிய நிலை வந்ததும் கண்டோம்.

இப்போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளிப்படையாக தமிழரசுக்கட்சிக்கு ஆதரவளிக்காமல் நல்ல வேட்பாளர்களை தெரிவுசெய்யுங்கள் எனச் சொன்னதற்கு கண்டனம் தெரிவித்து தமிழரசுக்கட்சியின் செயலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அனந்தி அதிகூடிய வாக்குகள் பெற்றுக்கொள்ளக் கூடிய சூழல் இருந்தது எனவும் அதனை தாம் சதிசெய்து முறியடித்தோம் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார் அவர்.

உதயன் பத்திரிகையின் விசேட பதிப்பு ஒன்றின் ஊடாக அனந்தி சிறிலங்கா ஆளுங்கட்சியுடன் சேர்ந்துவிட்டதாக வெளிவந்த செய்தியையும் இப்பின்னனியுடன் நோக்கவேண்டும். அனந்தியை பொறுத்தவரை அவருக்கு அது முதலாவது தேர்தல். அதில் அவருக்கான வாக்குவங்கி என்பது பிரதானமாக விடுதலைப் புலிகள் ஆதரவு வாக்குகள் என்பது வெள்ளிடைமலை.

எனவே அனந்தியை தோற்கடிப்பதன் மூலம் அல்லது இரண்டாம் நிலைக்கு தள்ளுவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுத்தளத்தை நிலைப்படுத்தக் கூடாது என்பதில் தமிழரசுக்கட்சி திட்டமிட்டு சதி செய்ததாகவே பார்க்கவேண்டும்.

அதன் தொடர்ச்சியாகவே அனந்திக்கு அமைச்சுப்பதவி வழங்குவதில் கூட முதலமைச்சருக்கு வெவ்வேறு வடிவங்களில் சங்கடங்களை ஏற்படுத்தி, இன்னும் பல சதிகளை அரங்கேற்றியதை பார்க்கவேண்டும்.

அப்படியானால் விடுதலைப் புலிகளின் தியாகங்களை பேசிபேசி, அந்தப் போராட்டத்தை 2009 இற்கு முன்னர் அழிப்பதில் எப்படி மறைமுகமாக அந்தக்கட்சி செயற்பட்டதோ

அதே அணுகுமுறையை வெவ்வேறு வடிவங்களில் – இன்றைய தமிழரசுக் கட்சியும் – மேற்கொள்வதாகவே பார்க்கப்படவேண்டும்.

அதனைப் புரிந்துகொள்வதற்கான தெளிந்த சிந்தையும் நேர்கொண்ட பார்வையும் எங்களுக்கு இருக்கின்றதா என்பதே இப்போதுள்ள கேள்வி.

Leave a comment