யாழில்.விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு

455 0

யாழ். நாக விகாரை விகாராதிபதியின் உடலை யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.நாக விகாரை விகாராதிபதி ஞானரத்ன தேரர் சுகவீனம் காரணமாக கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலம் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பணத்திற்கு கொண்டு வரப்பட்டு நாக விகாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இறுதி கிரியைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்நிலையில் முற்றவெளியில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட போது , யாழ்.மாநகர சபை அதற்கான அனுமதியினை வழங்கவில்லை. அதை அடுத்து , தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபி அமைந்துள்ள இடத்திற்கும் , யாழ்.கோட்டை பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் உடலை தகனம் செய்வதற்கு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட்டு அப்பகுதியில் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment