ஜனாதிபதி நாளை ராமேஸ்வரம் வருகை: அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

322 0

நாளை ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

ராமேஸ்வரம் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. வடமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். காசி போன்று புகழ்பெற்று விளங்கும் இந்த கோவிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை வருகை தந்து சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

நாளை காலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்படும் அவர் பகல் 10.30 மணி அளவில் மதுரை வருகிறார். இங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் ஹெலிபேட் தளம் செல்கிறார்.

பின்னர் கார் மூலம் ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்லும் அவர் அங்கு தரிசனம் செய்து விட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நடராஜன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மண்டபம் ஹெலிபேட் தளம், அப்துல் கலாம் மணி மண்டபம் பகுதிகளிலும் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

Leave a comment