அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்காக விஷேட பிரிவு

240 0

பிறப்புச் சான்றிதழ் இல்லாமை, தனது வதிவிடத்தை உறுதி செய்ய முடியாமை போன்ற காரணங்களால் தேசிய அடையாள அட்டை பெற முடியாதுள்ள, சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களுக்காக, விஷேட பிரிவொன்று ஆட்பதிவு திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ளது. 

இந்தப் பிரிவுக்கு அடையாள அட்டைகள் இல்லாத 5000க்கும் அதிகமான வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவற்றில் சுமார் 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பு சான்றிதழ் இல்லாத வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக, தான் வசிக்கும் பிரிவில் தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் நெருங்கிய உறவினர்கள் மூவர் மற்றும் நீண்ட காலமாக அதே பகுதியிலுள்ள தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொண்டுள்ள மேலும் மூவரின், சான்றிதழ் மற்றும் உறுதிப்படுத்தலுடன் கிராம சேவகரின் பரிந்துரைகளைப் பெற்று, தமது விண்ணப்பங்களை, ஆட்பதிவு திணைக்களத்தின் விஷேட பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், குறித்த நபர் இலங்கைப் பிரஜையாக இருத்தல் அவசியம். தேசிய அடையாள அட்டை இல்லாமையால், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாதுள்ள வாக்களார்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து கலந்துரையாடி இந்த வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வியானி குணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment