தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 22 ஆயிரம் பேர் பாதிப்பு – மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல்

268 0

தமிழகத்தில் அதிகபட்சமாக 22,197 பேர் டெங்கு காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்த ஆண்டு கொசுக்கள் மற்றும் சிறு பூச்சிகளால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

அதன்படி நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் 1,53,635 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் (கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,29,166, இறப்பு 245 ஆகும்). உயிரிழந்தோர் எண்ணிக்கை 226 பேர் ஆவர். இதில் தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 22,197 பேர் டெங்கு காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 52 பேர் பலியாகி இருக்கின்றனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கேரளா இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 19,776 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டும், 37 பேர் உயிர் இழந்தும் உள்ளனர்.

இதுதவிர சிக்குன்குனியா நோயால் நாடு முழுவதும் இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 30,606 பேர் சிக்குன் குனியாவால் தாக்கப்பட்டு உள்ளனர். எனினும் கடந்த ஆண்டில் (2016) பாதிக்கப்பட்டோரை விட இந்த எண்ணிக்கை 4 ஆயிரம் குறைவாகும்.

Leave a comment