சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

4266 0

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று சம்பள உயர்வு கேட்டு ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பத்மாவதி என்ற தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளி பணி, துப்புரவு பணி மற்றும் உதவியாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு அந்த நிறுவன மூலம் மாதம் ரூ.5,400 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டோர் இன்று ஆஸ்பத்திரியின் முன்பு பகுதியில் திரண்டனர். பின்னர் ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த தனியார் நிறுவன மேலாளர், போலீஸ் உதவி கமி‌ஷனர் அன்பு மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் இதேபோல் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.8,100 சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஆனால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் எங்களுக்கு ரூ.5,400 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. விடுமுறை இல்லாமல் கூடுதல் நேரம் வேலை பார்த்து வருகிறோம். அசுத்தமான பணிகளையும் மனமுவந்து செய்து வருகிறோம்.

முதல்-அமைச்சர் மாவட்டத்தில் குறைந்த சம்பளம் வழங்கப்பட்டு வருவது கேலிகூத்தாக உள்ளது. குறைந்த சம்பளம் வழங்குவதால் குடும்பத்தை நடத்த முடியாமல் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே உடனே சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சாலை மறியலுக்கு முயன்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி. 

அப்போது அந்த நிறுவனத்தின் மேலாளர் போராட்டத்தை கைவிடுங்கள் பேசி தீர்த்து கொள்ளலாம் என்றார். அதற்கு சம்மதிக்காத ஊழியர்கள் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஆஸ்பத்திரியின் முன்பு கேட்டை இழுத்து மூடியதால் ஊழியர்கள் வெளியில் செல்ல முடியவில்லை. இதையடுத்து நுழைவு வாயில் அருகே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தால் ஆஸ்பத்திரியில் துப்புரவு பணி, காவல் பணி மற்றும் உதவியாளர் பணிகள் பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் தவிப்புக்கு உள்ளாகினர். மேலும், பிரச்சனையை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment