ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை

262 0

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், ஜனநாயகத்திற்கு எதிரானவையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று ஆரம்பமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துவருகின்றது எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்றிட்டங்கள் குறித்து இலங்கை பாராட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2005, 2015 காலப்பகுதியில் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். லசந்த விக்ரமதுங்க இதில் ஒருவராவார். மேலும் பல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கடத்தல் சம்பவங்களும் இந்த காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. கடந்த கால ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கும், மௌனிக்கச் செய்வதற்கும், குரூரமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில ஊடகங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கின என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என்று அரசாங்கத் தகவல் திணைக்கள செய்திகள் கூறியுள்ளன.

Leave a comment