சர்வதேச நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் இலங்கைக்குள் வந்துள்ளன, இலங்கையில் கைத்துப்பாக்கிக்கு அனுமதியில்லாத நிலையில் சினைப்பர் ரகத்திலான துப்பாக்கி எவ்வாறு முஸ்லிம் நபரின் கைகளுக்கு கிடைத்தது என பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினர்.
எம்மை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என்னும் அவர் குறிப்பிட் டார்.
பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது கருத்தினை அவர் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் கூறியதாவது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளிநாட்டில் இருந்து மிகவும் பயங்கரமான சினைப்பர் ரக (gv15/2213) இயந்திர துப்பாக்கி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு முஸ்லிம் நபர் ஒருவரே இந்த துப்பாக்கியை பெற்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த சகல தகவல்களும் எம்மிடம் ஆதாரத்துடன் உள்ளன.
அதேபோல் குறித்த நபர், அவரது அடையாள அட்டை இலக்கம் என்பனவும் எம்மிடம் உள்ளன. ஆகவே பாதுகாப்பு அமைச்சை தாண்டி எவ்வாறு இந்த துப்பாக்கி இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டது? இலங்கையில் நபர் ஒருவருக்கு சாதாரண கைத்துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தவே அனுமதி இல்லாத நிலையில் இவ்வாறான மோசமான துப்பாக்கி எவ்வாறு அனுமதிக்கப்பட்டது. இந்த துப்பாக்கி மூலமாக வெடிச்சத்தம் கேட்காது சுடும் சில கருவிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனை பயன்படுத்தி யாரை வேண்டும் என்றாலும் இலக்கு வைக்க முடியும். அரச தலைவர்களை, அரசியல் வாதிகளை, முக்கிய பிரமுகர்களை, வியாபாரிகளை யாரையும் சுட முடியும். ஆகவே இந்த சம்பவம் சாதாரண விடயம் அல்ல. எம்மைக்கூட இலக்கு வைக்கக்கூடும் என்ற அச்சமும் உள்ளது, இந்த நாட்டில் பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் உள்ளன. நாம் இந்த நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக அடையாளப்படுத்தி வருகின்ற நிலையில் எம்மைப்போன்ற நபர்களை கூட கொல்ல வாய்ப்புகள் உள்ளன.
எனவே ஜனாதிபதி உடனடியாக இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். சாதாரண விடயமாக இவற்றை கருதக்கூடாது. உலகத்தில் இன்று இடம்பெறும் சம்பவங்கள், இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளின் காரணமாக இடம்பெறும் அழிவுகள் அனைத்தையும் நாம் அறிந்துள்ளோம். அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் அவ்வாறான ஒரு சூழலை உருவாக்க எவரும் இடமளிக் கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.