கொழும்பு மாநகர சபையிலும் புதிய தமிழ் வட்டாரங்களை உருவாக்கியுள்ளோம்

213 0

அசோகா பீரிஸ் எல்லை மீள் நிர்ணய அறிக்கையின்படி கொழும்பு மாநகரசபையில் வட்டார அடிப்படியில் தேர்வு செய்யப்படும் 66 உறுப்பினர்களில் இருபது தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படலாம். ஆனால், 2015ம் வருட எல்லை மேல் நிர்ணய அறிக்கையின்படி அந்த தொகை பத்துக்கு கீழே வந்துவிடும். முஸ்லிம் பிரதிநிதித்துவமும் அப்படிதான்.

உண்மையில் அசோகா பீரிஸ் அறிக்கை தயாரிக்கப்பட்ட போது, நாம் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு கவனித்து கடுமையாக உழைத்ததாலும், அந்த குழுவில் இருந்த அறிவோர் மற்றும் நல்லெண்ணம் கொண்ட அங்கத்தவர்களின் பங்களிப்பின் காரணமாகவும் இந்த நற்பெறுபேறு கிடைத்தது.

இந்த அசோகா பீரிஸ் எல்லை மீள் நிர்ணய அறிக்கையைதான் இப்போது பின்னோக்கி இழுத்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை கொழும்பு மாநகரசபையில் பிடுங்க பார்க்கிறார்கள். இதற்கு இடம் கொடுக்க முடியாது.

அதேவேளை தேர்தல் காலத்தில் மாத்திரம் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து எம்மை அர்த்தமில்லாமல் விமர்சிக்கும் சில தமிழ் அரசியல்வாதிகளும், குழுக்களும் நாங்கள் ஆளுமையுடனும், தூரப்பார்வையுடனும் போராடி உருவாக்கிய சபைகளிலும், வட்டாரங்களிலும்தான் போட்டிபோட இப்போது தம்மை தயார் செய்கிறார்கள்.

ஆனால், இந்த சபைகளையும், வட்டாரங்களையும் பெற இவர்கள் எதுவும் செய்யவில்லை. உண்மையில் இவர்களுக்கு இவைபற்றிய புள்ளிவிபரமோ, விளக்கமோ எதுவுமே தெரியாது என அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் தன் உத்தியோகப்பூர்வ முகநூலில் இதுபற்றி எழுதியுள்ளதாவது,

நுவரேலியாவில் எப்படி புதிய தமிழ் பெரும்பான்மை பிரதேச சபைகளை உருவாக்கினோமோ அப்படியே தலைநகர் கொழும்பு மாநகரசபையிலும் புதிய தமிழ் வட்டாரங்களை உருவாக்கினோம்.

நுவரேலியாவில் எப்படி புதிய தமிழ் பெரும்பான்மை பிரதேச சபைகளை உருவாக்கினோமோ அப்படியே தலைநகர் கொழும்பு மாநகரசபையிலும் புதிய தமிழ், முஸ்லிம் வட்டாரங்களை உருவாக்கினோம். இப்படியே தெஹிவளை மாநகர, கொலன்னவை நகர, அவிசாவளை, வத்தளை நகர சபைகளிலும் புதிய தமிழ் வட்டாரங்கள் உருவாகியுள்ளன.

இவற்றை நாம் எமக்காக செய்யவில்லை. தேர்தல் முறை மாற்றம், ஒருமுறை வந்தால் அது பல பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கப்போகிறது. ஆகவே எதிர்கால தலைமுறையையும் மனதில் கொண்டு செயற்பட்டுள்ளோம்.

இன்று நாங்கள் ஆளுமையுடனும், தூரப்பார்வையுடனும் உருவாக்கிய சபைகளிலும், வட்டாரங்களிலும்தான் எங்களை தினந்தோறும் காழ்ப்புணர்ச்சி கொண்டு திட்டி தீர்க்கும் “கோமா” தமிழர்களும், போட்டியிட போகிறார்கள் என்பதும், அவர்களுக்கும் விஷயம் தெரியாத நமது மக்களில் ஒரு சிலர் வாக்களிக்க போகிறார்கள் என்பதும் வேடிக்கையான உண்மைகள்.

எதிர்காலத்தில் நான் இல்லாதபோது எவரும் எனக்கு சிலை வைத்து கொண்டாட வேண்டாம். ஆனால், “மனோ கணேசன் என்று ஒரு அமைச்சன், கட்சி தலைவன் பதவியில் இருந்தான். அவன் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி அப்போது நம் சமூகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை” என்று எவரும் என்னை திட்டிவிடக்கூடாது என்று மட்டுமே நான் விரும்புகிறேன்.

இதனால்தான் இன்று என் முதுகிற்கு பின்னாலே, சில பெரும்பான்மை அரசியல்வாதிகள், என்னை “சண்டைக்கார தமிழன்” என்று திட்டுகிறார்கள். இவர்கள் என்னை திட்டிவிட்டு போகட்டும். ஆனால், நம் எதிர்கால பரம்பரை என்னை திட்டாமல் இருக்கட்டும்.

Leave a comment