ஆசிரியர் உதவியாளர்களுக்கு கூடிய விரைவில் தீர்வு!

334 0

அண்மையிலும் தற்போது தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்கள் தங்களது ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை ஆசிரியர் தரத்திற்கு உயர்த்தி நிரந்தரமாக்குமாறும் கொடுப்பனவை அதிகரித்து தருமாறும் கோரி மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த ஆசிரியர் உதவியாளர்களின் போராட்டம் நியாயமானது கூடிய விரைவில் இவர்களுக்கான தீர்வு கிடைக்கும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். மகரகம தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தபட்டு வரும் கல்விமானி பட்டபடிப்புக்கான கிளை ஒன்று கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நிறுவப்பட்டுள்ளது. இதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும்போதே கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பாடநெறி விரிவுரையாளர்கள் பாடநெறி ஆசிரிய பயிலுனர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

ஆசிரியர் உதவியாளர்களின் போராட்டம் நியாயமானது. தற்போது கிடைக்கும் வருமானத்துடன் ஒப்பிடுகையில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாது. வர்த்தமானி அறிவித்தலின் படியே ஆசிரியர் உதவியாளர்கள் தெரிவு செய்யபட்டார்கள். இவர்களின்  கொடுப்பனவு 4 ஆயிரம் ரூபாவில் இருந்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கபட்டுள்ளது. தற்போது இவர்கள் ஆசிரியர் பயிற்சி காலாசாலையில் பயிற்சிபெற்று வருகின்றார்கள். இன்னும் 06 மாதத்தில் பயிற்சி முடிவடைந்து விடும். அதற்கு பிறகு இவர்களுக்கு 37 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும். அதுவரைக்கும் பொறுத்திருக்க வேண்டும். ஆசிரியர் தொழில் செய்வதற்கு கட்டாயம் அந்த தொழில் தொடர்பில் பயிற்சி அவசியம் முழுமையான பயிற்சிகள் முடிவுறும்போதே இவர்கள் ஒரு முழுமையான ஆசிரியர்களாகின்றனர்.

அண்மையில், இவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு ஆர்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். இதற்கான தீர்வை உடனடியாக பெற்றுக் கொள்ளமுடியாது. சற்று பொறுத்திருந்து தான் பெற்றுக்கொள்ள வேண்டும். கொடுப்பனவு உட்பட இவர்களின் ஆசிரியர் தரத்தை மாற்றுவது என்றால் அமைச்சவை பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அங்கு அனுமதி பெற வேண்டும். திறைசேரியிலும் பொது நிர்வாக சேவையிலும் அனுமதி பெற வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக நடந்து விடாது. அதற்கு இன்னும் சில காலம் பொறுத்திருந்தால் இவர்களின் அனைத்து கோரிக்கைகளும் பயிற்சி முடிவின் பின்னர் நிறைவேறும். நான் கல்வி இராஜாங்க அமைச்சராக வந்த பிறகு இவர்களின் நியமனத்தை போராடி பெற்றுக்கொடுத்தேன். அதேபோல் இவர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன். இவர்களின் நலன் கருதி தற்போது கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலை பல்வேறு வளர்ச்சி படிகளை நோக்கி செல்கின்றது. இதன் அபிவிருத்திக்காக 85 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அதேபோல் இலங்கையில் உள்ள ஏனைய ஆசிரியர் கலாசாலைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

ஆசிரியர் தொழில் என்பது புனிதமானது. அந்த தொழிலை செய்யும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது அது உங்களுக்கு கிடைத்து இருப்பதை இட்டு சந்தோஷம் அடையுங்கள். உங்களுக்கு தான் கல்வியாளர்களையும் வைத்தியர்களையும் சட்டதரணிகளையும் பொறியியலாளர்களையும் உருவாக்கமுடியும். மனித வாழ்வில் உயர்ந்தவர்களும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களே காரணமாக இருந்துள்ளார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு கல்வியே பெரும் மூலதனமாகும். அதனை உற்பத்தி செய்யும் ஆசிரியர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியது கட்டாயமானதாகும். அதை நான் கட்டாயம் செய்வேன் என்று கூறினார். இந்த நிகழ்வில் அதிதிகள் கௌரவிப்பும் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரிய பயிலுனர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Leave a comment