உருளைக்கிழங்கிற்கான வரியை நீக்கியதன் காரணமாக மலையக விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக சபையில் சுட்டிக்காட்டிய கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், நீக்கப்பட்ட வரி மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் கமத்தொழில், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவம், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
விவசாயத்துறையைப் பொறுத்தளவில் புதிய தொழில்நுட்பம் எமது நாட்டிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட வேண்டும். அதன் மூலம் எங்களுடைய உற்பத்தி செலவை குறைக்க முடியும். விவசாயிகள் விவசாயத்துக்கான உற்பத்தி செலவை அதிகரிக்கின்ற காரணத்தால் அதற்கு ஏற்ற விலை கிடைக்காவிட்டால் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் வங்கிகளில் விவசாயத்துக்காக பெற்றுக் கொண்ட கடன்களை மீள செலுத்த முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி அந்த கடன் தொகையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றார்கள். இதன்மூலம் அரசாங்கத்துக்கும் திறைசேரிக்கும் பாரிய நஷ்டம் ஏற்படுகின்றது. எனவே புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதன் மூலம் உற்பத்தி செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
அதே நேரம் எங்களுடைய நாட்டின் அனைத்து விவாசாயிகளை
யும் அவர்கள் செய்கின்ற விவசாய பயிர்களுக்கு அமைய அவற்றை ஏற்றுமதி செய்வதற்கும் விவசாய அமைச்சின் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் எங்களுடைய நாட்டில் இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்த முடியும். எமது நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் விவசாய நாடாக இருந்தாலும் இன்னும் விவசாயத்தில் தன்னிறைவு அடையாதிருக்கின்றது. நான் அண்மையில் பங்களாதேஷுக்கு சென்றிருந்த பொழுது அவர்கள் விவசாயத்தில் தன்னிறைவு கொண்ட ஒரு நாடாக இருப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் அவர்கள் எங்களுக்கு பின்னால் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டவர்கள். எங்களுடைய பொருளாதாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது அவர்களுடைய பொருளாதாரம் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. அப்படியானால் ஏன் எங்களுடைய நாட்டை விவசாயத்தில் தன்னிறைவு அடைந்த ஒரு நாடாக மாற்றி அமைக்க முடியாது? பல நாடுகளிலும் நச்சுத்தன்மையற்ற, சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விவசாயத்தை முன்னெடுத்துவருகின்றனர். அவர்களுடைய அந்த முறையை எங்களுடைய நாட்டிலும் அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுடைய விவசாயிகளை தெரிவு செய்து அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்து அவர்களுக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் அவர்கள் அங்கு சென்று கற்கின்ற விடயங்களை இங்குள்ள விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வதற்குமான ஏற்பாடுகளையும் இந்த அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.
எங்களுடைய நாட்டில் இருக்கின்ற அனைத்து குளங்களையும் அபிவிருத்தி செய்து மழைக் காலங்களில் நீரை சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கபட வேண்டும். விசேடமாக எங்களுடைய மலையக பகுதிகளில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்தால் அதன்மூலமாக இந்த நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நீரை கொண்டு செல்வது மிக இலகுவாக இருக்கும்.அது மட்டுமல்லாமல் வரட்சியான காலங்களிலும் விவசாயத்திற்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியும். மலையக விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.அவர்களுக்கான உருளைக் கிழங்கு உற்பத்திக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.
வரவு – செலவுத் திட்டத்தில் விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது 16800 மில்லியன் ரூபாவாகும். அது தவிர வரவு– செலவுத் திட்ட முன்மொழிவுகள் 4000 மிலலியன் ரூபாவாகும். உரமானியத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை 35000 மில்லியன் ரூபாவாகும்.மொத்தமாக 55800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நெற்காணிகள் மற்றும் தொடர்புடைய நீர் வழங்கல் அபிவிருத்திக்கு 28 வீதமும் உணவு பாதுகாப்பிற்காக 27 வீதமும் விவசாய தொழில் முயற்சி வர்த்தகத்துக்கு 4 வீதமும் அனர்த்த முகாமைத்துவ பங்களிப்புக்காக 8 வீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விவசாய தொழில் முயற்சி வர்த்தகத்துக்கு இன்னும் அதிகமாக ஒதுக்க வேண்டும்.
உருளைக்கிழங்கின் வரி நீக்கம் காரணமாக எங்களுடைய விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கான நீக்கப்பட்ட வரியை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களுடைய விவசாயிகள் அனைவரும் மீண்டும் படுகுழியில் தள்ளப்படு வதோடு அவர்களுடைய உடமைகள் அனைத்தையும் இழந்து அரசாங்கத்துக்கு பெரும் சுமையாக மாறிவிடுவார்கள் என்றார்.