உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானிக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தலை எதிர்வரும் 27 ஆம் திகதி விடுக்கமுடியாதென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் எச்.ஹூல் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. இதேவேளை உள்ளூரட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானிக்கு மேற்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே அது தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் எச்.ஹூலிடம் வினவியபோதே அவர் இதைனத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக கடந்த 15 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட்மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதிர்வரும் 27 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தலை விடுக்கமுடியாது. எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் சனிக்கிழமை கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுக்கப்படும் என தீர்மானித்ததற்கிணங்க எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் வரையில் வேட்பு மனுக்களை பொறுப்பேற்பதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
எனவே எதிர்வரும் ஜனவரி மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் காலம் தாழ்த்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில், எல்லை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தேரதல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
எனினும் அதற்கான பணிகள் நிறைவுசெய்யப்பட்டதுடன் கடந்த முதலாம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா கைச்சாத்திட்டு அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்தார். அவ்வர்த்தமானி கடந்த 11 ஆம் திகதியே வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.