ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை எரித்துக்கொன்ற வாலிபர் கைது

301 0

சென்னை ஆதம்பாக்கத்தில் ஒருதலைக்காதல் காரணமாக இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ரேணுகா. இவர்களது மகள்கள் இந்துஜா (21), நிவேதா (20), மகன் மனோஜ்.

இந்துஜா பட்டதாரி பெண். இவரை வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் (22) என்ற வாலிபர் காதலித்தார். பள்ளி பருவத்திலேயே இந்த காதல் அரும்பியது.

ஆனால் இந்துஜாவின் காதலை பெற்றோர் ஏற்கவில்லை. காதலை கைவிடும் படி அறிவுறுத்தினார்கள். இதனால் மனம் மாறிய இந்துஜா ஆகாஷை கைவிட்டார். ஆனால் ஆகாஷ் விடுவதாக இல்லை. தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் எரிச்சல் அடைந்த இந்துஜா ஆகாஷை கண்டித்தார். நேற்று இரவு 9 மணியளவில் ஆகாஷ் இந்துஜா வீட்டுக்கு சென்றார். அப்போது இந்துஜா, அவரது தாயார், தங்கை, தம்பி அனைவரும் இருந்தனர்.

அவர்களிடம் இந்துஜாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கொலை வெறியோடு டர்பன் டைன் ஆயில் கேனுடன் வந்திருந்த ஆகாஷ் அதை இந்துஜா மீது ஊற்றினார்.அதைப் பார்த்ததும் அனைவரும் அலறினார்கள். யாரையும் வீட்டை விட்டு வெளியே விடாமல் அனைவர் மீதும் டர்பன் டைனை வீசினார். பின்னர் கையில் இருந்த லைட்டரால் தீயை கொளுத்தினார்.

உடலில் தீப்பற்றியதும் அனைவரும் கதறினர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். அதற்குள் இந்துஜா உடல் வெந்து பரிதாபமாக இறந்து போனார்.

உயிருக்கு போராடிய தாய் ரேணுகா, தங்கை நிவேதா ஆகியோரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்துஜாவை எரித்து கொன்றுவிட்டு ஆகாஷ் தப்பி ஓடினார். ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ஆகாஷையும் தேடிப் பிடித்து கைது செய்தனர்.காதல் பிரச்சினையால் நடந்த இந்த கொலை அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a comment