சசிகலாவின் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து, சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரிக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போலி நிறுவனங்களை கண்டறியும் முயற்சியில் மத்தியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், சென்னையில் சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
மேலும், வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் அரசியல் பின்னணி இருப்பதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலா உறவினர்களின் இல்லத்தில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை என்றார்.
“வருமான வரி சோதனை தொடர்பாக, சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டு வந்து விசாரிக்க வேண்டும். தினகரனை வெளியே விட்டது தவறு. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்றும் இளங்கோவன் கூறினார்.