கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை கோட்டூர்புரம் காந்தி மண்டபத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை மெரினா கடற்கரையில் 3 நினைவிடங்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடலோர சுற்றுச்சூழலை பாதுகாத்து, மேம்படுத்துவதற்காக தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இணைச் செயலாளர்களும் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
கடலோரப் பகுதிகளில் கட்டுமானம் கட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே மெரினாவில் நினைவிடங்கள் இருக்கும் நிலையில், அரசியல்வாதிகளின் விருப்பத்துக்காக இருக்கின்ற நினைவிடத்தின் அருகிலே மேலும் நினைவிடம் கட்டுகின்றனர். இதனால், உலகிலேயே இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை சுருங்கி வருகிறது.
மேலும், இப்பகுதியில் அடிக்கடி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்படுவதால், பொழுதுபோக்குக்காக பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல முடியாத நிலை இருக்கிறது.
எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களை 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோட்டூர்புரம் காந்தி மண்டபத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

