புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீ.பி. எழுதிய “நான் மூச்சயர்ந்த போது” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தேர்தல் முறை மாற்றம், புதிய யாப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகிய மூன்று விடயங்களும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தளவில் பாதிப்பான, ஆபத்தான நிலையையே ஏற்படுத்தும் என நாம் கருதுகிறோம். நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றி சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை செல்லாக்காசாக மாற்றுவதற்கான முயற்சி மிக வேகமாக நடந்தேறி வருகின்றது. அத்துடன் கடந்த காலங்களில் பாராளுமன்ற முறைகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் போல, மீண்டும் இந்த முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேர்தல் முறையை மறுசீரமைக்க வேண்டுமென அரசு வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றது.
முஸ்லிம் சமூகத்தினது பாரிய பங்களிப்பினாலும் பல்வேறு அர்ப்பணிப்புக்களினாலும் நாம் விரும்பி உருவாக்கிய நாட்டுத் தலைமைகள் இவ்வாறான புதிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதனால், அதன் மூலம் நமக்கு வரப்போகும் ஆபத்துக்கள் குறித்து நாம் கண்திறந்து பார்க்காமல் கண்மூடித்தனமாகவே இருக்கின்றோம்.
சிறிய பிரச்சினைகளுக்காக ஊருக்கு ஊர், பிரதேசத்துக்குப் பிரதேசம் என ஏட்டிக்குப் போட்டியாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றோமேயொழிய நமக்கு முன்னே வந்து நிற்கும் ஆபத்துக்கள் தொடர்பில் எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் இருப்பதுதான் வேதனையானது. அறிவுள்ள, ஆற்றலுள்ள, பணபலமுள்ள சமூகமாக முஸ்லிம் சமூகம் பார்க்கப்படுகின்ற போதும் இவ்வாறான விடயங்களில் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமானதே. சிறிய கட்சியின் தலைவன் என்ற வகையிலும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த கட்சியொன்றின் பொறுப்பாளன் என்ற வகையிலும் நாம் மிகவும் நொந்து போய் இருந்தாலும் இந்த ஆபத்துக்களை எவ்வாறு முறியடித்து, சமூகம் சார் வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற அதீத முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.
ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் ஆயுதமேந்திய போதும் முஸ்லிம்கள் அமைதியாகவே வாழ்ந்தனர். ஜனநாயக வழியையே தேர்ந்தெடுத்தனர். நமது அரசியல் முன்னோடிகள் கற்றுத்தந்த வழிமுறைகளை பின்பற்றியே ஆட்சியாளர்களுடன் எப்போதும் ஒத்துழைத்து வந்தனர், வருகின்றனர். இந்த யதார்த்தத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்ச் சகோதரர்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் தீர்வு ஒன்றை தேடி நிற்கும் பின்னணியிலும், அந்த கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றுவதென்ற ஆழமான சிந்தனையில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையிலும் முஸ்லிம்களின் சவால்களை வென்றெடுக்க வேண்டிய நிலை நமக்கு நேரிட்டுள்ளது.
கல்வி, பொருளாதார, வாழ்வாதார மற்றும் மீள்குடியேற்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் எமது கட்சி பல கட்டமைப்புக்களை வைத்துக்கொண்டு நேர்மையுடன் முன்னெடுத்துச் செல்கின்றது. எனினும் இந்த பயணத்தை தடுப்பதற்காக பல முனைகளிலும் அம்புகள் எய்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சமுதாயம் சார்ந்தவர்களின் அம்புகளும் சிங்களப் பேரினவாதிகளின் அம்புகளும், தமிழ்ப் பேரினவாதிகளின் அம்புகளும் வெவ்வேறு வடிவங்களில் பல்வேறு கோணங்களில் இருந்தும் நமக்கு எறியப்பட்ட போதும் இறைவனின் உதவியினால் அவற்றையெல்லாம் முறியடித்துக்கொண்டு முன்னேறும் சக்தியை இறைவன் தந்துள்ளான்.
சமூகத்துக்கு நேர்ந்துள்ள ஆபத்துக்களை வெளியில் பேசினால் ஆட்சியை தொலைக்கப்பார்க்கிறார், முன்னைய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விட்டார், நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்ப துடிக்கின்றார் என்றெல்லாம் கதையளந்து எமது குரல்வளையை நசுக்குவதற்கு எத்தனிக்கின்றனர் என்றார்.