பெற்றோல் விவகாரம் தொடர்பான அமைச்சரவையின் உபகுழு அறிக்கை நாளை ஜனாதிபதியிடத்தில் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பான காரணத்தினை கண்டறிவதற்காக அமைச்சர்களான சரத் அமுனுகம, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோரடங்கிய அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த உபகுழு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களிடத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவை உபகுழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தது. அதில் நானும் நியமிக்கப்பட்டிருந்தேன். எமது குழுவானது ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை தயாரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை நாம் அறிக்கையை ஜனாதிபதியிடத்தில் கையளிக்கவுள்ளோம்.
அறிக்கையில் உள்ள விடயங்களை ஊடகங்களிடத்தில் பகிரங்கப்படுத்த முடியாது. இருப்பினும் இந்த பெற்றோல் நெருக்கடி ஏற்பட்டு குழப்பமான சூழல் உருவாவதற்கான நிலைமைக்கு காரணம் என்னவென்பதைக் கண்டறிவதே எமது நோக்கமாகும். அது குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த காலத்தில் தரம் குறைந்த பெற்றோல் கொண்டுவந்தமை தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் என்னால் பதிலளிக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்திலேயே அந்த விடயம் நடந்தது. ஆகவே அவரே அதற்கு பதில ளிக்க வேண்டும் என்றார்