போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் உள்ள கணவனை இழந்த பெண்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் எதிர்காலத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை.
இவ்வாறு சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது, –
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கணவனை இழந்த பெண்கள் 90 ஆயிரம் பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். முன்னாள் போராளிகள் தமது வாழ்வாதாரத்தை தொலைத்துள்ளனர்.
இளைஞர்கள், யுவதிகள் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ளனர். இந்த விடயங்களை நான் தொடர்ச்சியாக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். வரவு – செலவுத் திட்டத்தில் அந்த யோசனைகள் உள்வாங்கப்பட்டிக்கின்றமையை இட்டு வரவேற்பையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 165 ஆயிரம் வீடுகள் அமைக்க வேண்டியுள்ளன. 50 ஆயிரம் கல்வீடுகளை அமைப்பதற்காக 750 மில்லியன் ரூபா முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் இரு வருடங்களில் வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்துக்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் உள்ள மாற்றுத் திறனாளிகள் 9 ஆயிரம் பேருக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா கொடுக்கப்படுது. அது ஒரு பகுதியினருக்கே கிடைக்
கின்றது. இந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைப் பயன்படுத்தி அனைவருக்கும் அந்தக் கொடுப்பனவு கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வசதியளிப்பதற்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. அதை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
முன்னாள் போராளிகள் 12 ஆயிரத்து 600பேர் இருக்கையில் 25 மில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி போதுமானதாகஇல்லை. அவர்களின் தொழில் தகைமைகளை மேம்படுத்தி அதற்கான வாய்ப்புக்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.
காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதற்கு முன்னெடுத்துச்செல்வதற்கான நிதி ஒதுக்கீடும், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளமை சிறப்பான தாக இருக்கின்ற அதேநேரம் அதனை நடைமுறைச் சாத்தியமாக்க வேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு செயற்றிட்டங்களை முன்னெடுத்து மக்களின் துயரங்களை துடைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.- என்றார்.

