ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான நெவஸ்கா லேடி கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட எரிபொருளை, நாடு முழுவதும் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கனிய வள களஞ்சியசாலை நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர், சஞ்சீவ விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.
700 மெற்றிக் தொன் எரிபொருள் கொள்ளளவுடன் முத்துராஜவெல மிதவையிலிருந்து எரிபொருளை பாய்ச்சும் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக, இந்திய எண்ணெய் நிறுவனத்தால், இலங்கைக்கு எரிபொருளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, பெற்றோலை தாங்கிவரும் மற்றுமொரு கப்பல் இன்று இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக 15 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோலை தாங்கிவரும் கப்பலொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளதாக கனிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், இன்று 7 ஆவது நாளாகவும், நாட்டின் பல பாகங்களிலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்ததை காணக்கூடியதாக இருந்துள்ளது.