ஊழல் மோசடிகள் மற்றும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசேட மேல்நீதிமன்றம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மூன்று நீதிபதிகளைக் கொண்ட மூன்று தீர்ப்பாயங்கள் இதற்கிணங்க அமைக்கப்படவுள்ன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது விசேட மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்காக பிரேரணையினை நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள முன்வைத்தார். இந்த பிரேரணை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கியது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள், மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லையென்று பெரும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த விடயங்கள் குறித்து விசாரிக்க விசேட மேல்நீதிமன்றங்கள் அமைப்பதற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கான பிரேரணையினை நேற்று அமைச்சரவையில் நீதி அமைச்சர் தலாதா அத்துக்கோரள சமர்ப்பித்ததுடன் இதற்கு சகல அமைச்சர்களும் ஆதரவு வழங்கினர். நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள், பொது சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை, பயங்கரவாதத்திற்கு பணம் வழங்க முற்பட்டமை, பணத்தினை பதுக்க முற்பட்டமை, நிதி தொடர்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட தவறினை மேற்கொண்டமை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து துரிதமாக விசாரணை நடத்துவதற்காகவே இந்த விசேட மேல்நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சாதாரண மேல் நீதிமன்றங்களில் இடம்பெற்று வரும் நிதி மோசடிக்குற்றச்சாட்டுக்கள், மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழங்குகளை பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க விசேட மேல் நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியும் என்றும் இந்த விசேட நீதிமன்றங்களை அமைப்பதற்கான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டுமென்றும் நீதி அமைச்சர் தலா அத்துக்கோரளையினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் கோரப்பட்டிருந்தது. இத்தகைய சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த விசேட மேல் நீதிமன்றங்களினால் அளிக்கப்படும் தீர்ப்புக்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.