கிழக்கில் புதிதாக உதயமாகியுள்ள முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவச் சபை உறுப்பினர்களான ஹசன் அலி, பசீர் சேகுதாவூத் ஆகியோருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலிக்கும் இடையில் கொழும்பில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அஸாத் சாலியின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், ஜனவரியில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் கூட்டணியமைத்து களமிறங்குவது தொடர்பிலேயே இரு தரப்பினராலும் தீவிரமாக ஆராயப்பட்டது எனத் தெரியவருகின்றது.
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புடன் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் இணையச் பேச்சுக்கள் நடைபெற்ற நிலையில், அது இன்னும் சாத்தியமாகாத காரணத்தாலேயே தற்போது அந்த வெற்றிடத்துக்கு அஸாத் சாலியைக் கொண்டுவரும் நோக்கிலேயே இந்தப் பேச்சில் மேற்படி முஸ்லிம் கூட்டமைப் பானது ஈடுபட்டதாக அறியமுடிகின்றது.
இந்தச் சந்திப்பின்போது இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இவ்விடயம் குறித்து இன்னும் தீவிரமாக ஆராய்ந்து அடுத்த வெள்ளிக்கிழமையன்றே இருதரப்பின் சகல முக்கியஸ்தர்களுடனும் கலந்தாலோசித்துத் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்தது.
ஆனால், அடுத்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கவே தாம் இதுவரையில் முடிவு செய்துள்ளதாகவும், கூட்டணி அமைத்தாலும் தமது கொள்கைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் இணங்கும் தரப்புடனேயே அது சாத்தியமாகும் என்று அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.