இடைக்கால அறிக்கையில் பொது உடன்பாடு எட்டப்படாவிடின் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் அதனை மீண்டும் விவாதிக்க முடியும். இறுதியில் பொது உடன்படிக்கையின் அடிப்படையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசுகளும் புதிய அரசமைப்பை உருவாக்குவதாகத் தெரிவித்தே ஆட்சியைப் பிடித்தன. இந்த அரசும் அவ்வாறுதான் வாக்குறுதி வழங்கியது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, அரச தலைவர் முறைமையைப் பொது வாக்கெடுப்பு இல்லாது நீக்குவதாகத் தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியிருந்தார்.
ஆனால் அரச தலைவர் முறைமையை நீக்கப் பொது வாக்கெடுப்பு அவசியம். புதிய அரசமைப்பின் ஊடாகவே அது சாத்தியம். அரச தலைவர் முறைமை நீக்கப்பட வேண்டும் என்று நாம் 1978ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
தமிழ் மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தைப் புதிய அரசமைப்பின் ஊடாக நிறைவுக்கு கொண்டு வரமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகின்றது.
தமது கட்சியைப் பலப்படுத்தவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையை உருவாக்கவும் ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கலாம்.
நிறைவேற்று அரச தலைவர் முறைமையை தக்கவைத்து ஆட்சியைக் கொண்டுசெல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சி கருத முடியும். தீர்வு ஒன்று அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து நாம் செயற்பட்டு வருகின்றோம்.
இப்போது நாடாளுமன்றில் விவாதிக்கப்படும் இடைக்கால அறிக்கை பொது உடன்பாட்டு அறிக்கையாகும்.
இதில் முரண்பாடுகளும் அனைவரும் ஏற்றுகொள்ளும் நிலைப்பாடுகளும் உள்ளன. இந்த அறிக்கைகளில் பொது உடன்பாடு எட்டாவிடின் மீண்டும் பெப்ரவரி மாதம் விவாதிக்கப்படும். அதன் போதும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்.
அதில் அனுமதி கிடைத்தால் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்படும். அதன் பின்னர் மீண்டும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வெற்றிபெற வேண்டும். அதன் பின்னர் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும்.
நாம் ஆட்சியில் இருந்திருந்தால் இதனை விடச் சரியான அரசமைப்பு உருவாக்கப்பட்டு இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும். இவர்களால் முடியாததை நாம் செய்து காட்டியிருப்போம். இப்போதும் சரியான அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்தைக் கருத்திற் கொண்டே போராடி வருகின்றோம்.
போரின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத காரணத்தால்தான் பன்னாட்டுச் சமூகம் எம்மை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. முதலில் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் தவறைச் செய்துகொண்டு பன்னாட்டுச் சமூகத்தை விமர்சிக்க இயலாது என்றார்.