சென்னையில் பெய்து வரும் மழையால் தொற்று நோய் பரவாமல் தடுக்க 200 சிறப்பு மருத்துவ நடமாடும் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மழைக்கால சிறப்பு மருத்துவ நடமாடும் வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் அந்த பகுதியிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்கனவே ஏற்படுத்தி 401 முகாம் செயல்பட்டு வருகின்றன.
அது மட்டுமல்லாமல் இப்போது 200 மருத்துவக் குழுக்களோடு நடமாடும் மருத்துவக்குழு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. மொத்தம் 601 மருத்துவக்குழுக்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகின்ற வகையில் அரசால் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மழைக் காலங்களில் ஏற்படுகின்ற நோய்களிலிருந்து விடுபடுவதற்கும், உடனுக்குடன் அந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நோக்கத்திலும் இந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவ வசதி மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது.
பொது மக்கள் ஏதாவது நோய் அறிகுறி இருந்தால், அந்த பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு உடனடியாக சென்று மருத்துவரை அணுகி மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இதில் சித்த மருத்துவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு மருத்துவத் துறையில் இருக்கின்ற மருத்துவர்களும் இங்கே பணி புரியவந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மழைக் காலங்களில் தொற்று நோய் ஏற்படாமல் இருப்பதற்காக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தண்ணீரில் குளோரின் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிவதற்கும் அதற்கு தகுந்த உபகரணங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது.
தண்ணீரில் குளோரின் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிந்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்கள் சுகாதாரமாக இருப்பதற்காக பிளீச்சிங் பவுடர் நடமாடும் குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதி மக்களுக்கு அவர்கள் விநியோகம் செய்வார்கள். அரசைப் பொறுத்தவரைக்கும் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட மழைக்கால மருத்துவ சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன் னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், விஜயபாஸ்கர், கருப்பணன், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், பாஸ்கரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

