மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் சீல் வைத்து பூட்டு

375 0

49-300x201பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக இன்று (25) வியாழக்கிழமை காலை காலவரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதர வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கடந்த 23ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்திற்குச் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது பல்வேறு குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டது.

இதற்கமைவாக காலவதியான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தமை, காலவதி திகதி அற்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டமை, எலியின் நடமாற்றம் மற்றும் அதன் எச்சங்கள் பொருட்களுடன் கலந்துள்ளமை, கலஞ்சிய சாலை உரிய முறையில் பராமறிக்கப்படாமை, நிலப்பகுதி அழுக்காக காணப்பட்டமை போன்ற 5 குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் குறித்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்திற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரியினால் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை (25)  விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த லங்கா சதொச விற்பனை நிலையத்தை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டார்.

அதற்கமைவாக இன்று காலை குறித்த லங்கா சதொச விற்பனை நிலையம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாகவும், அடையாளம் காணப்பட்ட குறித்த பிரச்சினைகள் நிவர்த்தி செய்த பின் நீதி மன்றத்தின் அனுமதியுடன் குறித்த லங்கா சதொச விற்பனை நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படும் என மன்னார் சுகாதர வைத்திய அதிகாரி தெரிவித்தார்.