கடற்படைத் தளபதி பதவி வகித்த வைஸ் அட்மிரல் சின்னையா யுத்த காலத்தில் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளார்!

248 0

கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் சின்னையாவின் பதவி காலத்தை இரண்டு மாதம் வரை வரையறை செய்தமைக்குப் பிரதான காரணம் ஏனைய வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குதற்கேயாகும் என்பதுடன், அவருக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே, கடற்படைத் தளபதி பதவியை வழங்கினோம்”என, அமைச்சரவைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார்.

அரசாங்கத்  தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (01) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடற்படைத் தளபதி பதவி  வகித்த வைஸ் அட்மிரல் சின்னையா,  யுத்த காலத்தில் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளார் எனவும் குறிப்பிட்ட அவர் , இவ்வாறு யுத்த வெற்றிக்குப் பாரிய பங்களிப்புகளை வழங்கிய கடற்படையினர் பலர் உள்ளனர். அவர்களுக்கும் இத்தகைய பதவி நிலையைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவே, பதவிக் காலத்தை குறைப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், யுத்த காலத்தில் பிரதான பங்களிப்பு வழங்கியமைக்கு அரசாங்கம் அவருக்கு வழங்கியுள்ள கௌரமாக இதனைக் கருத வேண்டும். வெறும் வீரராகவே இருந்து ஓய்வு பெறாது, கடற்படைத் தளபதி என்ற பதவியில் இருந்து  செல்வதென்பது, நாட்டுக்குச் சேவை செய்தமைக்கு அவருக்குக் கிடைத்த கௌரவமாகும் என, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கடற்படைக்ககென 24 பில்லியன் ரூபாய் செலவில் புதிய கப்பலொன்றை கொள்வனவு செய்யவுள்ளதாக அறிய முடிகிறது. யுத்த காலத்தில் கூட இவ்வாறானதொரு கப்பல் கொள்வனவு செய்யப்படவில்லை. இதற்கு என்ன காரணமென, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

யுத்த காலத்திலும் கொள்வனவு செய்ப்பட்டது. ஆனால், பெரும்பாலான நாடுகள் இலங்கைக்குக் கப்பலை வழங்கவில்லை. தற்போது நாட்டில் யுத்தம் இல்லைதான். ஆனாலும், அது என்றாவது தேவைப்படலாம் எனக் குறிப்பிட்டார்.

Leave a comment