நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன் முறையீட்டு மனு தொடர்பிலான தீர்வு நாளைய தினம் அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போடடியிட்டு வெற்றிப்பெற்றிருந்தார் கீதா குமாரசிங்க.
இந்நிலையில் அவர் சுவிட்சர்லாந்திலும் குடியுரிமை பெற்றவர் என்பதால் அவருக்கு இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்க முடியாது என தெரவித்து காலி மாவட்டத்தினை சேர்ந்த சிலரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளை தொடர்ந்து கடந்த மே மாதம் 3 ஆம் திகதி கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி விஜித் மல்லகொடவின் இணக்கத்திற்கு அமைவாக நீதிபதி பத்ம சூரசேன இந்த இதனை அறிவித்திருந்தார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை ஆட்சேபித்து நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க விசேட மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்தார்.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவானது ஈவா வனசுந்தர, உபாலி அபேரத்ன மற்றும் அனில் குணரத்ன உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளைய தினம் தீர்ப்பினை அறிவிக்கவுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

