யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளதாவது;
சமூக நீதிக்கான தேடல் வியாபித்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டை அனைத்துத் தரப்பினரும் கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்க வேண்டியது சமூகக் கடமையாகும்.
அரசியல் கைதிகளின் விடுதலை என்பது தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு – தமிழ் சமூகம் செய்யக்கூடிய நன்றிக்கடன் என்பதை அனைத்துத் தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே – மாணவர்களை அச்சுறுத்தல் மூலம் நசுக்கும் செயற்பாட்டை செய்யும் எவராயினும் தமிழ் மக்களின் சமூகக் கடமையை நிறைவேற்றத் துடிக்கும் மாணவர்களுக்கு இடைஞ்சல் புரிந்தவராகவே வரலாற்றில் இடம்பிடிப்பார்.
அத்தகைய வரலாற்று அவமானத்தை எவரும் பெற்றுவிடக்கூடாது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டிநிற்கின்றது.
எனவே – அரசியல் கைதிகள் – அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் நிபந்தனையற்ற விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்து இணைக்கப்பட்ட பொது அமைப்புக்களுடன் இணைந்து அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலைக்காக குரல்கொடுப்பவர்கள் என்னும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரித்து நிற்கின்றது.

