யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகம்!-ஞா.குணசீலன்

225 0

யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்துடன் மலேரியா காய்ச்சலுக்கான அனோபிளிஸ் ஸ்ரெபன்சி என்னும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

அதே சமயம் யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகின்றது.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் 2 மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

விசேடமாக வெளி மாவட்டங்களில் இருந்து சுகாதார பணியாளர்கள் யாழ்.மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அதே சமயம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் மலேரியா காய்ச்சலை பரப்பும் அனோபிளிஸ் ஸ்ரெபன்சி என்ற நுளம்பு அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

யாழ்.மாவட்டத்தில் முதலில் யாழ்.புகைரத நிலைய பகுதியில் இந்த நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து நல்லூர் பகுதிகளிலும் இந்த நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.எனினும் எவருக்கும் நோய் தாக்கம் உண்டானமை கண்டுபிடிக்கப்படவில்லை.இந்நிலையில் மழை காலம் ஆரம்பமாவதால் பொதுமக்கள் விழிப்பாக செயற்படவேண்டும்.

அதே சமயம் பொதுமக்களின் விழிப்புணர்வு இல்லாமல் டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்தும் நுளம்புகளை கட்டுப்படுத்த இயலாது.

எனவே மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு நுளம்பை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அவர் மேலும் கேட்டுள்ளார்.

கருப்பை கழுத்து புற்றுநோய் தொடர்பாக..

கருப்பை கழுத்து புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 10 வயதை தாண்டிய பெண் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் எச்.பி.வி தடுப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது.

இதனை கருத்தடை ஊசி என மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் பரப்படுகின்றது.

ஆனால் அதில் உண்மையில்லை. கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு ஊசியே போடப்படுகிறது யாரும் அஞ்சவேண்டாம்.

பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் 10 வீதமானவை கருப்பை கழுத்து புற்றுநோய்களே ஆகும்.

மேலும் மற்றய புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் கருப்பை கழுத்து புற்றுநோய் அதிக தாக்கம் கொண்டதாகவும், மரணத்தை உண்டாக்க கூடியதாகவும் இருக்கின்றது.

இந்நிலையில் கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய சுகாதார அமை ச்சினால் ஹம்பகா,

குருநாகல், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கருப்பை கழுத்து புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பு ஊசி போடப்படுகின்றது.

இது பாடசாலை மாணவிகளுக்கு குறிப்பாக 10 வயதை தாண் டிய பாடசாலை மாணவிகளுக்கு இந்த தடுப்பு ஊசி போடப்படுகின்றது.

இதனால் 70 வீதம் கருப்பை கழுத்து புற்றுநோயை கட்டுப்படுத்தலாம்.

மேலும் 30 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு இந்த நோய் அதிகம் வருகிறது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்நோய் அதிகம் வருகிறது.

இதேபோல் இலங்கையில் வருடம் ஒன்றுக்கு 850 தொடக்கம் 950 பேருக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் வருகிறது.

இதற்கமையவே கிளிநொச்சி மாவட்டத்தில் 10 வயதை தாண்டிய பாடசாலை மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய்க்கான தடுப்பு ஊசி போடப்படுகின்றது.

அதனை கருத்தடை ஊசி என தவறாக சிலர் கருதியதால் மக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகின்றது.

ஆனால் மக்கள் அதனை நம்ப வேண்டாம் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு தங்கள் பிள்ளைகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு ஊசியை போட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

Leave a comment