தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கு செல்ல வேண்டும் – தயாசிறி ஜயசேகர

237 0
 சிங்கள மக்களாலும், மஹாநாயக்க தேரர்களாளும் மற்றும் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கு செல்ல வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதனை அடிப்படையாகக் கொண்டே புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
ஊடகவியலாளரின் இந்தக் கருத்தை மறுதளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர தமது கருத்தை வெளியிட்டார்.
அதிகாரப் பகிர்வு, பிரதேச அபிவிருத்தி என தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன.
அரசியலமைப்பை மாற்றி, தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கடந்த 50, 60 வருடங்களாக அவர்கள் கோரி வருகின்றனர்.
அதன் காரணமாகேவே, மோதல் இடம்பெற்றதுடன், திம்பு மற்றும் இந்தியாவிலும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.
அத்துடன், வெளிநாடுகளும் இதனைக் கூறின.
இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் தமிழ் மக்களுடன் பேசினால்தான் அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும் என்று அமைச்சர் கூறினார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு, நாட்டை பிளவுபடுத்தாமல், ஒற்றை ஆட்சியை இல்லாது செய்யாமல், பௌத்த மதம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் நியாயமான தீர்வொன்றுக்கு செல்ல வேண்டும்.
இலங்கையில் உள்ள சிங்களர்களாலும், மஹாநாயக்க தேரர்களாளும் மற்றும் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை காண வேண்டும் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கமல் குணரட்ன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கூறுவதுபோல செயற்பட்டால் தமிழர்கள் அதற்கு பதிலொன்றை வழங்குவர்.
அதற்கு யார் தீர்வு வழங்குவது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, வடக்கில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை விடவும், விக்னேஸ்வரன் பிரபல்யமடைந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்தியஸ்த அடிப்படையில் பிரச்சினையை தீர்க்க சம்பந்தனும் சுமந்திரனும் முயற்சிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் அடிப்படைவாதத்தின்மூலம் பிரச்சினையை தீர்க்க விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார்.
இந்த நிலையில், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் மத்தியஸ்த நிலைப்பாட்டில் தாம் இருப்பதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்த நிலையில், இருந்து எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை ஏற்படாத வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave a comment