பிரகீத் எக்னெலிகொடவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கவில்லை!

309 0

Prageeth-Eknaligoda-640x400காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இருக்கவில்லையென விசாரணைகள்மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட வழக்கு நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) கோமாகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சார்பாக முன்னிலையான அதிகாரிகளே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கும் எந்தவித தொடர்பு இருக்கவில்லையெனவும், அவர் விடுதலைப் புலிகளிடமிருந்து நிதியெதனையும் பெறவில்லையெனவும், தீவிரவாதச் செயற்பாடுகள் தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை காணப்படவில்லை என்றும் தமது விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளதாகவும் நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரகீத் எக்னெலிகொட தொடர்பாக சிறீலங்காவின் முப்படைத் தளபதிகளிடம் கலந்துரையாடியதாகவும், எந்த தீவிரவாத செயற்பாடுகளிலும் எக்னெலிகொட தொடர்புபட்டதாக பதிவுகள் எதுவும் இருக்கவில்லை என்று முப்படைகளின் தளபதிகள் உறுதியாக தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட எட்டு புலனாய்வு அதிகாரிகளையும் எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.