சமூக விடுதலைக்காக சிலுவை சுமந்த நாம், இன்று சரீர விடுதலைக்காகப் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எம்மவர் சாதனைகளைச் சாலையேற்றிக் கதிரையேறிய கதாபாத்திரங்கள் கண்மூடிச் செயற்படும் இவ்வேளையில் கல்விப் புலத்தைக் கொண்டு பல்கலைக் கழக சமூகம் கண்கூர வேண்டும். இவ்வாறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விச் சமூகத்துக்கு முகவரியிட்டு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அதில் உள்ளதாவது-;
அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் சட்டம் என்பவற்றால் கைது செய்யப்பட்டு இலங்கையின் பல்வேறு சிறைக் கூடங்களிலும் நெடுங்காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான நாம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகச் சமூகத்துக்கு அன்புரிமையுடன் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கின்றோம்.
அன்றுமுதல் இன்றுவரை தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டங்களில் வரையறுத்துக் கூறமுடியாத பெரும் வகிபாகத்தை வழங்கும் பல்கலைக்கழகச் சமூகத்தினதும், சிவில் சமூகங்களின தும் காலமறிந்த செயற்பாடுகளே முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தமிழர்களின் முதுகெலும்பாக இருக்கின்றன.
அதைக் கண்டே இலங்கை ஆட்சியாளர்களும், தமிழினத்தின் வாக்கு வேட்டையாடிகளும் தமிழ் மக்களுக்குச் சிலதையே னும் செய்யத் தலைப்படுகின்றனர்.
அரசியலுக்கு அப்பாலான அகிம்சைக் குரல்களை அவ்வளவு இலகுவில் யாராலும் அடக்கி விடவோ, அலட்சியப்படுத்தி விடவோ முடியாது என்ற உண்மையின் அடிப்படையில் எங்கள் விடுதலைக்காக தடுப்புச் சிறை களில் இருந்து தாகம் கொள்கின்றோம்.
சிறைக் கூடங்களில் 130 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமது நெடுங்காலச் சிறையிருப்பு எமது குடும்பத்தினதும், பிள்ளை களினதும் அன்றாடத்தை அழிவு நிலைக்குத் தள்ளிப் பல ஆண்டுகளாகின்றன.
சமூக, பொருளாதார, கலாசாரப் பிரச்சினைகள் அவர்களைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. உறவுகளின் எல்லையற்ற பிரிவு மனங்களை உருக்குலையச் செய்துள்ளது.
தமிழரின் அரசியல் விடுதலைக்கான ‘போராட்டத்துடன் தொடர்புபட்டவர்கள்’ என்ற காரணத்தைக் காட்டி சிறைவைக்கப்பட்டிருக்கும் நாம் ‘போர்க் கைதிகள்’ அல்லது ‘அரசியல் கைதிகள்’ என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
போர் முடிந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அரசு நல்லிணக்க அடிப்படையில் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து, அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒரு பொறிமுறை ஊடாக விடுவிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
எமது இந்த நியாயமான கோரிக்கையைப் பலப்படுத்தி பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரும் ஓரணியில் நின்று குரல் உயர்த்தி எமது விடுதலையை வலுப்படுத்த வேண்டும் என்று விநய முடன் கோருகின்றோம்.- என்றுள்ளது.