ஏறாவூர் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

281 0

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மாணவனுக்கு நீதி வேண்டியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சவுக்கடி, குடியிருப்பு முருகன் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 27வயதுடைய தாயும் அவரது 11வயதுடைய மகனும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

ஏறாவூர்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு, கலைமகள் மகா வித்தியாலயத்தில் தரம் 06 ல் பயிலும் பீ. மதுசன் மற்றும் அவரது தாயான மதுசாந்தி பீதாம்பரம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் படுகொலை தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படுகொலையை கண்டித்தும், கொலையாளிகளை விரைவாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரியும் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர், பாடசாலை சமூகம், கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்துகண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர்.

பல்வேறு சுலோகங்கள் கொண்ட பதாகைகளை தாங்கியவாறு பிரதான வீதியூடாக குடியிருப்பு பொதுநூலகம் வரை சென்றதுடன், அங்கு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

வித்தியாவின் கொலைகளை தொடர்பான சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி வழங்கியது போன்று இந்த கொலை தொடர்பிலும் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமனற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் கலந்துகொண்டு கொலைக்கு கண்டத்தினை தெரிவித்ததுடன், கொலையாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

Leave a comment