புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம்

7827 0

மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தமொன்றோ அவசியம் கிடையாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களை தவறாக வழிநடத்துவது யார் எனவும் கேள்வி எழுப்பினார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை ஊடக கல்லூரி உட்பட மூன்று நிறுவனங்கள் மேற்கொண்டிருந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

புதன்கிழமையும் வியாழக்கிழமையும் அனைத்து ஊடகங்களினையும் அவதானதித்திருந்தேன்.  அவை அனைத்தும் தலைப்புச் செய்தியாக புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் திருத்தங்களோ தேவையில்லை என அஸ்கிரிய மற்றும், மல்வத்து பீடங்கள் தீர்மானித்ததாக அவர்களின் படங்களை பிரசுரித்து தலைப்புச் செய்திகளை வெளியிட்டிருந்தன.

அதிலும் குறிப்பாக மல்வத்து பீட மகாநாயக்கரின் படத்தை பிரசுரித்திருந்தன.  மல்வத்து பீட மகாநாயக்கர் தற்போது நாட்டில் இல்லை. நான் இன்று அவருடன் தெலைபேசியில் பேசினேன். அவர் இலங்கையில் இல்லை. பின்னர் எப்படி அவருடைய படத்தினை பிரசுரிக்க முடியும்.

புதிய அரசியலமைப்பொன்று தேவையில்லை என்ற தலைப்புடன் செய்திகளில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடதிபதிகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளபோதிலும், அந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த கூட்டத்திற்கு அவ்விரு மகாநாயக்கர்களும் சென்றிருக்கவில்லை.

அப்படியிருக்கையில், உண்மையை திரிபுபடுத்தி உண்மைக்கு புறம்பான செய்தியே வெளியிடப்பட்டுள்ளமையானது ஏன் என்பது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்கள் , ஊடக செய்தி பிரதானிகளிடம் உடனடியாக கேட்டுச் சொல்லமுடியுமா? என்று நான் உங்களிடம் (ஊடகவியலாளர்களிடம்)  கேட்கின்றேன். எனது கேள்விக்குப் பதிலொன்றை பெற்றுத் தந்தால் தான அதற்கு என்னால் பதிலளிக்க முடியும். அப்போது அதனையும் இணைத்து செய்தியாக பிரசுரிக்கு முடியும்.

புதிய அரசியலமைப்பொன்று இன்னும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை என ஜனதிபதியும் நானும் (பிரதமர்) கூறுவதை ஏற்றுக் கொள்வதாக மல்வத்து பீட மகாநாயக்கர் தமது அபிப்பிராயத்தை அண்மையில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார். அவ்வாறான நிலையில் குறித்த கூட்டம் சம்பந்தமான செய்தியை வெளியிடுவது தொடர்பில் யாருடைய படத்தினை பிரசுரிக்க வேண்டும் என்று சிந்தித்திருக்க வேண்டும். குறித்த கூட்டத்திற்கு கண்டி தியவடன நிலமேயினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் மகாநாயக்கர்களின் படங்களுக்கு பதிலாக நிலமேயின் புகைப்படமே செய்தியில் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே இந்தக் கூட்டத்தினை மையப்படுத்தி மக்களை  தவறாக வழி நடத்தவேண்டாம். மகாநாயக்கர்கள் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்துக் கூறுவார்களாக இருந்தால் அதைச் செய்தியாக வெளியிடுங்கள். அதற்கு நாங்கள் தடை விதிக்கப்போவதில்லை. அதைவிடுத்து இல்லாதவொன்றை செய்தியாக பிரசுரிக்க வேண்டாம் என்று நான் அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருக்காத நிலையில் அவர்களது படங்களை மையமாகக் கொண்டு தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில்,  நான் தெரிவிக்கும் பதில் கருத்துக்களுக்கும் அந்தளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தலைப்புச் செய்தியாக வெளியிடப்படுமா?  எனது கருத்துக்களை தலைப்புச்செய்தியாக  செய்தியாக வெளியிடுவதாக உறுதிமொழியொன்று தருவீர்களா?

அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையொன்றை வழங்கியிருக்கின்றார்கள். அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (சிங்கள, ஆங்கில ஊடங்களின் பெயர்களை குறிப்பிட்டு) இந்த விளையாட்டுக்களை நடத்த வேண்டாம். புதிய அரசியலமைப்புக்கான  வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான நடவடிக்கைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் விவாதமொன்று நடைபெறவிருக்கின்றது. அதன்போது நாம் வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிந்துகொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்.

Leave a comment