உண்ணாவிரத போராட்டத்தில் சிவமோகன் எம்.பி.பங்கேற்பு

389 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு ராணுவ முகாம் அமைந்துள்ள 49 குடும்பங்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு புதுக்குடியிருப்பு மக்கள் கடந்த மூன்றாம் திகதி முதல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, கடந்த நான்கு நாட்களாக சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் இப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் இன்று காலை முதல் மக்களுடன் இணைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு, கேப்பாப்புலவு, பரவிப்பாஞ்சான் என வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் நிலமீட்புப் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.